-ஓர் ஆய்வு
தொடர் 1:
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.
இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், "அல்லாஹ்வுக்கு உருவமில்லை' என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்.
அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், "அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது' என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் தெளிவான ஆதாரங்கள் இந்த ஆலிம்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, தவ்ஹீது பிரச்சாரம் தலைகாட்டத் துவங்கிய மாத்திரத்தில் மக்கள் திருக்குர்ஆனின் தமிழாக்கங்களை அதிகமதிகம் படிக்கத் துவங்கினர். இந்தத் தமிழாக்கங்கள் மக்களிடம் மாபெரும் தாக்கத்தையும் தூய இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தாகத்தையும் அதிகரித்தது.
உண்மையான கடவுள் கொள்கையை அவர்கள் அறியத் தலைப்பட்டனர். அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது என்ற விளக்கம் அந்த உண்மையான கடவுள் கொள்கையில் உள்ளது தான் என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். அல்லாஹ் அரூபி, உருவமற்றவன் என்ற அசத்திய நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட்டனர்; வெளியேறினர்.
ஆனால் இந்த பரேலவிஸ ஆலிம்கள் மட்டும் இந்தச் சிந்தனைக்கு வரவில்லை. இது வரை வர மறுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைந்து கொடுப்பதாக இல்லை.
அண்மையில் சென்னையில் இந்த பரேலவிஸக் கொள்கைவாதியான அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இது தொடர்பாக விவாதம் நடந்தது.
இதில் தவ்ஹீத் அணி சார்பில் பி.ஜே., "இறைவனுக்கு உருவமுண்டு' என்ற தலைப்பில் வாதம் புரிந்தார். அல்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளி, அள்ளிப் போட்டார்.