இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Tuesday, March 15, 2011

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தந்தைக்கும் அவர்களின் பாட்டனாருகும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை.
இதை திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது
ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். . (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். . கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 36: 2-6
ஆனாலும் அவர்கள் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:62
 நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 5:69
 நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
திருக்குர்ஆன் 22:17
இவ்வசனங்களில் ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.
இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயம் என்று கூறுகின்றனர். நெருப்பை வணங்கும் சமுதாயத்தின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்ற சாதாரண உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. மேற்கண்ட வசனங்களில் ஸாபியீன்களின் நன்மைகளுக்கு கூலி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது.
ஹதீஸ்களை ஆராயும் போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு இணை கற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபிகள நாயகத்துக்கு வைத்த பெயர் ஸாபியீன்களில் ஒருவர் என்பதாகும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபியீ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும் இதில் இருந்து நாம் அறியலாம். இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள் இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள் என்று புஹாரி 3522 வது ஹதீஸில் காணலாம். இஸ்லாத்தை ஒருவர் ஏற்றால் அவருக்கு அந்த மக்கள் வைத்த பெயர் ஸாபியீ என்பது தான் என இதில் இருந்து அறியலாம்.
அது போல் ஒரு கூட்டத்தினருடன் நடந்த போரில் அவர்கள் சரணடைந்து இஸ்லாத்தை ஏற்கவும் முன் வந்தனர். அப்போது நாங்கள் இஸ்லாத்தில் சேர்கிறோம் எனக் கூறாமல் நாங்கள் ஸாபியீ ஆகி விட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் இதை ஏற்காமல் தளபதி காலித் பின் வலீத் அவர்களுடன் போரைத் தொடர்ந்தார், இது பற்றி அறிந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலித் பின் வலீதைக் கண்டித்தனர். புஹாரி 4339, 7189
ஸாபியீ என்று சொல்லப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை என்பதில் இருந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த மக்கள் தான் ஸாபியீ என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியாலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.
இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.
இப்படி வாழாமல் அறிவைப் பயன்படுத்தாமல் சிலைகளை வணங்கிய காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிறார்கள்.