-ஓர் ஆய்வு
தொடர் 1:
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.
இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், "அல்லாஹ்வுக்கு உருவமில்லை' என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்.
அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், "அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது' என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் தெளிவான ஆதாரங்கள் இந்த ஆலிம்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, தவ்ஹீது பிரச்சாரம் தலைகாட்டத் துவங்கிய மாத்திரத்தில் மக்கள் திருக்குர்ஆனின் தமிழாக்கங்களை அதிகமதிகம் படிக்கத் துவங்கினர். இந்தத் தமிழாக்கங்கள் மக்களிடம் மாபெரும் தாக்கத்தையும் தூய இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தாகத்தையும் அதிகரித்தது.
உண்மையான கடவுள் கொள்கையை அவர்கள் அறியத் தலைப்பட்டனர். அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது என்ற விளக்கம் அந்த உண்மையான கடவுள் கொள்கையில் உள்ளது தான் என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். அல்லாஹ் அரூபி, உருவமற்றவன் என்ற அசத்திய நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட்டனர்; வெளியேறினர்.
ஆனால் இந்த பரேலவிஸ ஆலிம்கள் மட்டும் இந்தச் சிந்தனைக்கு வரவில்லை. இது வரை வர மறுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைந்து கொடுப்பதாக இல்லை.
அண்மையில் சென்னையில் இந்த பரேலவிஸக் கொள்கைவாதியான அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இது தொடர்பாக விவாதம் நடந்தது.
இதில் தவ்ஹீத் அணி சார்பில் பி.ஜே., "இறைவனுக்கு உருவமுண்டு' என்ற தலைப்பில் வாதம் புரிந்தார். அல்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளி, அள்ளிப் போட்டார்.
அல்லாஹ் உருவமற்றவன் என்ற தலைப்பில் பேசிய அப்துல்லாஹ் சமாளி, பி.ஜே. எடுத்து வைத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்குக் கண்ட கண்ட, கழிவு கெட்ட வியாக்கியானங்களைக் கொடுத்து கடைசி வரைக்கும் மறுத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் வசனங்களையும் ஹதீஸ்களையும் கேலியும் கிண்டலும் செய்தார்.
இதற்குக் காரணம் இந்தப் பரேலவிகள், அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று ஏற்கனவே முடிவில் இருந்தது தான். அதனால் தான் அந்தக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கடைசி வரை மறுத்தனர்; கேலி செய்தனர்.
அவர்கள் மறுத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் என்னென்ன? என்பதை நாம் பார்க்கின்ற அதே வேளையில், இந்த ஆதாரங்கள் இஸ்லாமியக் கடவுள் கொள்கையின் உயிர் நாடிகள் என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை ஒரு தொகுப்பாகவும் ஆக்கமாகவும் இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது அந்தத் தொகுப்பிற்குள் செல்வோம்.
இறைவனின் திருவுருவம்:
பொதுவாக எல்லா மொழிகளிலும் உறுப்புக்களைப் பற்றி பேசும் போது அது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் நேரடியான பொருள் அல்லாத வேறு கருத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.
"தலை வலிக்கிறது' என்று கூறினால் "தலை' என்ற வார்த்தை தலை என்ற நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். ஆனால் தலைக்கனம் பிடித்தவன் என்று கூறும் போது கர்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம்.
பயன்படுத்தப்படும் இடத்தையும், அதனுடன் இணைத்துக் கூறப்படும் சொற்களையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருள் கொள்வது தான் சரியான முறையாகும்.
இறைவனின் உறுப்பு பற்றிக் கூறப்படும் வசனங்களிலும் இது போன்ற நிலை உள்ளது. சில இடங்கள் இறைவனின் உறுப்பைக் கூறும் வகையிலும் சில இடங்கள் வேறு கருத்தைக் கூறும் வகையிலும் அமைந்துள்ளன.
இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாதது தான் இதில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணம்.
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:115
இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே திரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற சொற்றொடருக்கு நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ் பல திசையில் இருக்கிறான் என்ற கருத்து வந்து விடும். அவன் அர்ஷில் இருக்கிறான் என்ற கருத்துக்கு எதிராகவும் அத்வைதத்தை நிலை நாட்டும் வகையிலும் அமைந்து விடும்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
அல்குர்ஆன் 28:88
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்
அல்குர்ஆன் 55:26, 27
இந்த வசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! உம் இறைவனின் முகம் மட்டுமே மிஞ்சும் என்ற சொற்றொடருக்கு இறைவனின் பண்பு மட்டும் மிஞ்சும் என்று கருத்து கொள்ள முடியாது. இறைவனின் முகம் மட்டும் மிஞ்சும் என்று பொருள் கொண்டு, அந்த முகம் என்பது இந்த இடத்தில் முழு உருவத்தையும் குறிக்கும் என்று புரிந்து கொள்கிறோம்.
சென்னை விவாதத்தில் கூட, இறைவனின் உறுப்புகளைப் பற்றிப் பேசும் எல்லா வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுத்துத் தான் நாமும் வாதிடுவோம் என்று எதிர்பார்த்து, அப்படி வாதிட்டால் எளிதில் முறியடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு ஜமாலி விவாதிக்க வந்தார். ஆனால் சமாளிக்க முடியாத ஆதாரங்களை மட்டுமே எடுத்துக் காட்டுவது என்று நாம் தெளிவாக இருந்ததால் அவரால் தனது தீய கொள்கயைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.
இறைவனின் முகம் தொடர்பாகத் திருக்குர்ஆன் வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்த்தோம். இப்போது ஹதீஸ்களில் வரும் ஆதாரங்களைப் பார்ப்போம்.
ஒளிமயமான திருமுகம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். (அவை:)
1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.
4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். -மற்றோர் அறிவிப்பில் "நெருப்பே அவனது திரையாகும்' என்று காணப்படுகிறது.- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 263
அவனது முகத் தோற்றம்:
"உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் (தாக்குவதை விட்டும்) தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஆதமைத் தன்னுடைய முகத்தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4731, அஸ்ஸுன்னத் லிஅபீ ஆஸிம் 228, தப்ரானி 478
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல், அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதை உறுதி செய்து கொண்டிருக்கின்றன.
இறைவனின் இரு கண்கள்:
தூய்மையான அல்லாஹ்வுக்குக் கண்கள் இருக்கின்றன. அதற்குரிய ஆதாரங்களை திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பார்ப்போம்.
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:58
"அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படையுங்கள் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்ற அல்லாஹ்வின் சொல்லிலிருந்து "செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்'' என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) ஓதிக் கொண்டே, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கட்டை விரலை தமது காதின் மீது, அடுத்த விரலை தமது கண் மீது வைத்துக் காட்டியதைக் கண்டேன்'' என்று தெரிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைராவின் அடிமை அபூயூனுஸ்
நூல்: அபூதாவூத் 4103
அல்லாஹ், தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, பார்ப்பவன், செவியுறுபவன் என்று அதிகமான இடங்களில் குறிப்பிடுகின்றான். இருப்பினும் இந்த வசனத்தை மட்டும் இங்கு நாம் எடுத்துக் காட்டுவதற்குக் காரணம், நபி (ஸல்) அவர்கள் தமது காதையும், கண்ணையும் கை விரல்களால் காட்டி விளக்கம் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வுக்குக் கண்கள், காதுகள் உண்டு என்பதை உணர்த்துகிறார்கள்.
எல்லை இல்லாத இறைப் பார்வை:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒளியே அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.
நூல்: முஸ்லிம் 263
ஒற்றைக் கண் குருடன் அல்லன்:
நபி (ஸல்) அவர்கள் மக்கüடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 3057
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கண்கள் இருக்கின்றன; அவை குறைவற்றவை என்பதைத் தெரிவிக்கின்றன.
தொடரும் ....!